இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்: வாலிபர் கைது

மும்பை: ஆபாச வீடியோவை அழிப்பதாக வரவழைத்து, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தானே மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு சமீபத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வீடியோ கால் வந்தது. இளம்பெண் அந்த அழைப்பை எடுத்து பேச முயற்சி செய்தார். அப்போது எதிர்முனையில் வாலிபர் ஒருவர் ஆடையில்லாமல் இருந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இணைப்பை துண்டித்தார்.

இந்தநிலையில் சிறிது நேரத்தில் அந்த வாலிபர், இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பினார். அந்த வீடியோவில் ஆடையில்லாமல் இருந்த வாலிபரிடம், இளம்பெண் வீடியோ காலில் பேசுவது போன்ற காட்சிகள் இருந்தது. இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பவாய் பகுதியில் வந்து நேரில் சந்தித்தால் வீடியோவை அழித்துவிடுவதாக கூறினார். இதையடுத்து இளம்பெண் அங்கு சென்றார்.

அப்போது வாலிபர் இளம்பெண்ணை அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் ஆபாச வீடியோ காலையும் அழிக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மான்பாடா போலீசில் புகார் அளித்தார். பின்னர் அந்த புகார் பவாய் போலீசாருக்கு மாற்றப்பட்டது. பவாய் போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது கோவண்டி சிவாஜி நகர் பகுதியை சேர்ந்த ஜாபர் சேக் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.