தெளிவுப்படுத்துங்கள் முத்திரை குத்தாதீர்கள் – நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அல்போன்ஸ் புத்திரன் பதில்

நேரம், பிரேமம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அல்போன்ஸ் புத்திரன் கோல்டு என்ற படத்தை இயக்கியுள்ளார். பிரித்விராஜ், நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதல் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தச் சூழலில் படத்துக்கு வந்திருக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து அல்போன்ஸ் புத்திரன் தனது முகநூல் பக்கத்தில், “கோல்டு படம் குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களைப் பார்க்கிறேன். படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை எழுதியவர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேநீர் சரியில்லை என்றால் அது நன்றாக இருக்கிறதா? இல்லையா? அதில் உள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதன் மூலம் டீயை தயாரித்தவர் அடுத்த முறை திருத்திக்கொள்ள முடியும். ஆனால், அப்படியில்லாமல் வெறுமனே அது மோசமான தேநீர் என முத்திரை குத்தினால் அதில் ஈகோ மட்டுமே வெற்றிபெறும். அதில் இரண்டு தரப்பினருக்குமே எந்தப் பயனும் இருக்காது.

எனது படத்திற்கு நான் ‘பிரேமம் 2’ என்றோ, ‘நேரம் 2’ என்றோ பெயர் வைக்கவில்லை. மாறாக அதற்கு ‘கோல்டு’ என்று தான் பெயரிட்டுள்ளேன். நானோ அல்லது எனது படக்குழுவினரோ உங்கள் வெறுப்பை சம்பாதிக்கவோ அல்லது உங்கள் மதிப்புமிக்க பொன்னான நேரத்தை வீணாக்கவோ முயற்சிக்கவில்லை. தயவு செய்து என்னையும், ‘கோல்டு’ படக்குழு உறுப்பினர்களையும் சந்தேகிக்க வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.