ஆசியாவின் சிறந்த கொடையாளிகளாக ஷிவ் நாடார், கவுதம் அதானி அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிங்கப்பூர்: ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசியாவின் சிறந்த கொடை யாளிகள் பட்டியலில், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் ஷிவ் நாடார் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள், செல்வாக்குமிக்க மனிதர்கள் உட்பட பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

இந்த வகையில், ஆசிய அளவிலான சிறந்த நன்கொடை யாளர்கள் பட்டியலை 15 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இதன் 16ம் ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், குஜராத்தைச் சேர்ந்த, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இடம் பிடித்துள்ளார்.

latest tamil news

அவர், அதானி அறக்கட்டளையை 1996ல் துவங்கி, இதன் வாயிலாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். கவுதம் அதானி, கடந்த ஜூனில் தன் 60வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, சமூக சேவை பணிகளுக்காக, 60 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை தருவதாக அவர் உறுதி அளித்தார்.

இந்த தொகை, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு செலவிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இவரது அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும், 37 லட்சம் இந்தியர்கள் பயன் அடைகின்றனர். அடுத்தபடியாக, தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார், இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

latest tamil news

‘ஹெச்.சி.எல்., டெக்னாலஜீஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனரான இவர், ஷிவ் நாடார் அறக்கட்டளை வாயிலாக 8,000 கோடி ரூபாய்க்கு மேல் சமூக நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும், 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் பணத்தை சமூக நலப்பணிகளுக்கு வழங்கி உள்ளார்.

இவர்களை தவிர, ஐ.டி., துறையைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் சூட்டா, மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் பிரமால் வாசுதேவன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.