ஈரோடு மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பலை பிடிக்கச் சென்ற வனத்துறையினரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வனவிலங்குகளை மர்ம கும்பல் ஒன்று வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது வனப்பகுதிக்குள் இருந்த கும்பல் வனத்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். மேலும் அவர்களைப் பிடிக்கச் சென்ற வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினரும் அவர்களை நோக்கி பதிலடி தாக்குதல் கொடுத்தனர். இதில் ஒருவரை மட்டும் வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் 4 பேர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து தப்பி சென்றவர்கள் குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.