`கார்த்திகை தீபத்தை யார் முதலில் ஏற்றுவது?’-கோயிலில் திமுக-ஓபிஎஸ் குடும்பம் தள்ளுமுள்ளு

இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் யார் ஏற்றுவது என்பதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் மற்றும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் மலை மேல் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயில் பல ஆண்டுகளாக பாழடைந்து பராமரிப்பின்றி இருந்து வந்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, ஓபிஎஸ் அரசியல் வளர்ச்சிக்குப்பின் அவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் முயற்சியால் சொந்த செலவில் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பக்தர்கள் சென்று வரும் வகையில் கோவிலுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலின் கார்த்திகை திருவிழா காலங்களில் கோவிலுக்கு தேவையான அனைத்து  அடிப்படை வசதிகளும் ஓபிஎஸ் தனது சொந்த செலவில் செய்து வந்திருக்கிறார். இதனால் கடந்த 14 ஆண்டுகளாக ஓபிஎஸ் குடும்பத்தாரினர்தான் இக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகின்றனர். 
image
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மட்டுமே கார்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி வைத்து வந்து கொண்டிருந்தனர். இந்த சூழலில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இந்த ஆண்டு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோவிலில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபம் ஏற்று அனுமதிக்க கூடாது என திமுகவைச் சேர்ந்த தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
image
அப்படியான சூழலில் நேற்று கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்காக வழக்கம்போல் ஓபிஎஸ் குடும்பத்தினர் அந்த கோவிலுக்கு செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். மற்றொருபக்கம், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் செயல் அலுவலர்களை கொண்டு கார்த்திகை தீபம் ஏற்ற திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் குறிப்பிட்ட இந்த பெரியகுளம் பாலசுப்ரமணியர் திருக்கோயிலில், செயல் அலுவலர் ராம திலகம் என்ற பெண் செயல் அலுவலரை கார்த்திகேயன் தீபம் ஏற்ற திமுகவினர் மேடையேற்றினர்.
image
அதே சமயம் ஓபிஎஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஓபிஎஸ்-ன் இளைய மகன் ஜெயப்பிரதீப்புக்கு பரிவட்டம் கட்டப்பட்ட நிலையில், அங்கிருந்த தங்கத்தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தங்கதமிழ்செல்வன் – ஜெயப்பிரதீப் இடையே மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
image
இதனிடையே கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக தீபத்துடனும், செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்ற தீ பந்தத்துடனும் நின்றனர். இதனால் இருவருக்கிடையேவும் போட்டி ஏற்பட்டது. அப்பொழுது கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்டபோது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கும் பூசாரிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக ஜெய பிரதீப் கையில் வைத்திருந்த விளக்கை கோயில் பூசாரி பெற்றுக் கொண்டு கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார்.
image
இதனால் ஆத்திரமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்  மற்றும் திமுகவினர் ஓபிஎஸ் தரப்பினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு அந்த இடத்தை விட்டு ஆவேசமாக கிளம்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசிய ஜெயப்பிரதீப், திமுகவினர் அரசியல் காரணங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை மக்களும் தெய்வமே பார்த்துக் கொள்வார்கள் எனவும் ஆவேசமாக முழங்கினார். 
இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் கைலாசநாதர் திருக்கோவிலுக்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட கொப்பறையில் ஒரு குடம் நெய் ஊற்றி கார்த்திகை தீபத்தை வழிபட்டு பின்பு கைலாசநாதர் சாமி தரிசனம் செய்தார். கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தால் கார்த்திகை தீபம் காலதாமதமாக 7 மணிக்கு ஏற்றப்பட்டது. இதனால் கார்த்திகை தீபத் திருவிழாவை காண வந்த பக்தர்கள் பெரும் அவதி உற்றதோடு கோவிலில் அரசியல் சண்டையை புகுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியோடு  பக்தர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.