சபரிமலையில் யாருக்கும் முன்னுரிமை வழங்கக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு

திருவனந்தபுரம்:சபரிமலை வந்தால் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கொச்சியிலிருந்து சபரிமலை சென்றுவர ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை நடத்தப்படும் என்று ஒரு தனியார் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. நிலக்கல்லில் ஹெலிகாப்டரில் இறங்கிய பின்னர் காரில் பம்பைக்கும், பின்னர் அங்கிருந்து டோலியில் சன்னிதானத்திற்கும் சென்று விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்ட விளம்பரத்தில் தெரிவித்திருந்தது. இந்த விவரம் கேரள உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

உடனடியாக விளம்பரத்தை இணையதளத்தில் இருந்து நீக்கும்படி அந்த நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனம் விளம்பரத்தை நீக்கியது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘சபரிமலை வந்தால் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான்.  யாருக்கும் எந்த முன்னுரிமையும் கிடையாது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டர் சர்வீஸ் எப்படி நடத்த முடியும்? திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.