பாஜக மட்டுமல்ல.. எந்த கட்சி பின்னாலும் போக வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை – கடம்பூர் ராஜு காட்டம்!

பாஜக தலைமையில் கூட்டணி என்ற வார்த்தை உண்மையான அதிமுக தொண்டர்களிடமிருந்து வராது. பாஜக மட்டுமல்ல எந்தக் கட்சி பின்னால் போக வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், வரும் 9-ம் தேதி பேரூராட்சி, 13-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி, 14-ம் தேதி ஒன்றியங்களில் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

செஞ்சியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய புதுச்சேரி முதலமைச்சர் சென்ற கார்

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காலத்திற்கு ஏற்ப கொள்கையை மாற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும், பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தாலும் அவர்களது கொள்கை வேறு, எங்களது கொள்கை வேறு, கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்றும், நாட்டில் உள்ள நிலைமையை எதிர்த்து போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பதிலாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும். போராட வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிற்கு ஜால்ரா அடித்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை செல்வராஜ் ஏற்கனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் காலாவதியான அரசியல்வாதி. இடையிலே வந்தவர் இடையில் போகிறார். திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதி கூறியது கருத்து கிடையாது‌. அவரது உள்ள குமறலை தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வேறுபாட்டினை சொல்லாமல் சொல்லி உள்ளார். தொண்டர்கள் பதவிக்கு வர முடியும் என்பது அதிமுகவில் உள்ளது. திமுகவில் அந்த நிலைமை இல்லை. உதயநிதி ஸ்டாலினை தற்போதில் இருந்து தயாராக்கி வருகின்றனர்.

சட்ட மன்ற தேர்தலில் டிடிவி தினகரனால் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அவர் அவருடைய கட்சியை வளர்க்க வேண்டும். அதிமுக பற்றி கூற எவ்வித முகாந்திரமும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலைப்பாடு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும், ஊருக்கு ஊர் நிறம் மாற்றிக் கொள்வார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். 10.5 இட ஒதுக்கீடு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழகத்தில் கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் நாங்கள் வரவேற்றோம்.

தமிழகத்தில் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்று கூறும் வைத்திலிங்கம் அதிமுகவிலேயே இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன் சேர்ந்த கட்சிகளுக்கு திமுக தலைமை வகிக்கும். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு அதிமுக தலைமை வகிக்கும்.‌ பாஜக தலைமையில் கூட்டணி என்ற வார்த்தை உண்மையான அதிமுக தொண்டர்களிடமிருந்து வராது. பாஜக மட்டுமல்ல எந்தக் கட்சி பின்னால் போக வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை” இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.