மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்கு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என  சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முன்னதாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் கண்துடைப்பு கூட்டத்தை நடத்திய தமிழக அரசு, மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், மின் கட்டணத்தை உயர்த்தியது. அதுபோல, சொத்து வரி, கழிவுநீர் மற்றும் குடிநீர் வரி என அனைத்து வரிகளையும் கடுமையாக உயர்த்தி உள்ளன.

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட முதல் நூறு யூனிட் மின்சார மானியத்தை ரத்து செய்யும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணையும் வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால், அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.