ஈரோடு: தன்னை கேட்காமலேயே ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக நிர்வாகியாக அறிவித்துவிட்டதாக ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி ஆதரவாளர் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதனிடையே, அதிமுக பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளராக உள்ள ஜெயராமனை வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராமன், தான் இன்னும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருப்பதாகவும், தன்னை கேட்காமலேயே பன்னீர்செல்வம் நிர்வாகியாக அறிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக ஜெயராமன் கூறியுள்ளார். மொத்தத்தில் இந்த விவகாரம் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.