சமீபத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பது சொந்த வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால், வாடகைக்கு விடப்பட்ட வீட்டுக்கு, வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க முடியாது.

அப்படி இணைக்கும் போது, அவர்கள் வீட்டை காலி செய்த பின்னர், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். இதையடுத்து, ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படாது என்று அறிவிப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை.
எனவே மின் கட்டண மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டு அதுதொடர்பான அரசாணையை ரத்து செய்யவும் வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இன்று இந்த மனு உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை டி.நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையின் படி, இந்த வழக்கை நாளை விசாரணை செய்ததாக நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.