உணவு தரையில் சிந்தியதால் மெட்ரோ ரயிலை சுத்தம் செய்த மாணவன்- சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது உணவு தரையில் சிந்தியதால் மாணவர் ஒருவர் அதை தனது கைக்குட்டையால் சுத்தம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

அண்மையில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர் ஒருவர் தனது பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்தார். அப்போது தவறுதலாக அவரது பையிலிருந்த டிபன் பாக்ஸ் கிழே விழுந்து, அதில் இருந்த உணவு மொத்தமும் தரையில் கொட்டியது.

உடனடியாக தனது நோட்டு புத்தகத்தில் இருந்து ஒரு தாளை கிழித்து கீழே கொட்டிய உணவை அந்த மாணவர் எடுத்து சுத்தம் செய்தார். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து உணவு விழுந்த இடத்தை நன்றாக துடைத்து சுத்தமாக்கி உள்ளார். உணவு சிந்துவதற்கு முன்பு எப்படி அந்த இடம் இருந்ததோ, அதைப் போலவே அந்த இடத்தை மாற்றிவிட்டார்.

மாணவரின் இந்த செயலை அங்கிருந்த சிலர் புகைப்படமாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. மேலும் அந்த மாணவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இணையத்தில் பலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

ஆஷு சிங் என்பவர் தனது லிங்க்ட்இன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்த புகைப்படத்துக்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக்குகளைக் குவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.