மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழுந்து, 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவுக்கும் நாளை அதிகாலைக்குக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும்.
இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருபத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்., தருமபுரி , சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், டெல்டா ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
புதுவை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர் கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் சென்னையிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
காற்றுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரையில் பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மாலை முதல் நாளை அதிகாலை வரையில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வரையிலும் சமயங்களில் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பின்னர் நாளை காலை நேரத்தில் படிப்படியாக அதிகாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் குறைந்து நாளை மாலை 30 முதல் 40 சமயங்களில் 50 கிலோ மீட்டரில் வீசக்கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளை பொறுத்தவரையில் இன்று மாலை துவங்கி நாளை அதிகாலை வரை பலத்த காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் சமயத்தில் 70 வீசக்கூடும்.