மாண்டஸ் புயல் | சென்னையில் விடிய விடிய கனமழை – அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை

சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ‘மாண்டஸ்’ புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் இன்று (டிச. 9) நள்ளிரவு கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று விடிய விடிய சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் விட்டுவிட்டு பெய்த மழை அதிகாலை நேரம்போல் கனமழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.

அடுத்த 3 மணிநேரத்துக்குள் கனமழை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்குள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கரூர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதேபோல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.