மாமல்லபுரத்தை கடக்க தொடங்கிய மாண்டஸ்; சென்னையில் சூறைக் காற்று.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக நடப்பு ஆண்டில் அதிக புயல்கள் உருவாகும் எனவும், அதிக
மழை
பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தற்போது தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்தது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை நோக்கி புயல் நெருங்கியதால், காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று முதலே தொடர்ந்து சூறைக் காற்றுடன் மழை பெய்துவருகிறது. இன்று வரை பெய்து வரும் தொடர் மழை பொழிவால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் கடக்கும் கடற்கரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. நாளை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனால் இன்று நள்ளிரவு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்காங்கே மின் தடை செய்யப்பட்டது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிலவரம் குறித்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று, பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டார்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் காணொளி வாயிலாக ஆய்வு நடத்தினார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை அமைச்சகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மாண்டஸ் புயல் தற்போது சென்னையை நெருங்கியுள்ளது. சென்னையை நோக்கி புயல் நெருங்கி வருவதால், காற்றின் வேகமும் அதிகரித்து வருகிறது. மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தரைக் காற்றின் வேகம் பலமாக வீசத் தொடங்கியுள்ளது. சென்னையில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதனால் சென்னையில் இரவில் நடைபெறும் துப்புறவு பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.