இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் பி.டி.உஷா..!

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் தில்லியில் வருகிற டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் இறுதி வாரத்திலேயே முடிவடைந்தது.

கடந்த மாதம் 27ம் தேதி 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, இன்று நடந்த வாக்கெடுப்பில் உயர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது.

58 வயதான பி.டி.உஷா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 4 தங்கம் உள்பட 11 பதக்கங்களை அவர் வென்றுள்ளார். 1986-ம் ஆண்டு நடந்த சியோல் ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 4 x 400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு 4 தங்க பதக்கங்களை தட்டி சென்றார். இதுதவிர, 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். 1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடையோட்ட போட்டியில் 4-வது இடம் பெற்றார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 95 ஆண்டுகால வரலாற்றில் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அண்மையில் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இவர் தேர்வு செய்யப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.