எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மட்டி அடி – ர.ர.,க்கள் கப்சிப்!

அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்த நிலையில், பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ” நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்தக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் கூறுவது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓ.பன்னீர்செல்வம் தடுத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலேயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்” என்று ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பற்றி முடிவு இன்னும் எட்டப்படாத சூழலில் தேர்தல் ஆணையத்தை எப்படி சேர்க்க முடியும்? அதிமுகவை பிரதிநிதித்துவப் படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்காமலேயே இடைக்கால உத்தரவை பிறப்பிக்க கோருவது ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக பொதுக்குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது. அதிமுகவை சட்ட விரோதமாக கைப்பற்ற திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் விரக்தியடைந்து உள்ளார். இதனால் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி அவசரம் காட்டுகிறார். எனவே, எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.