
‛தெறி' ரீ-மேக்கில் பவன் கல்யாண் நடிக்க கூடாது : தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் தெறி. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை ஹரிஷ் சங்கர் என்பவர் இயக்க இருப்பதாகவும் டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பவன் கல்யாணின் தீவிரமான ரசிகை ஒருவர், தெறி ரீமேக்கை இயக்கவிருக்கும் ஹரிஷ் சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தெறி படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க கூடாது . அப்படி நடித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஒரு மிரட்டல் செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, பவன் கல்யாண் ரீமேக் அல்லாமல் நேரடி படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். அதையடுத்து பவன் கல்யாண் ரசிகர்கள் #WeDontWantTheriRemake என்ற ஒரு ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர். இப்படி தனது பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் இருந்து தெறி ரீமேக்கில் தான் நடிப்பதற்கு எதிர்ப்பு வலுத்திருப்பதால், இந்த படத்தில் நடிப்பதா? வேண்டாமா? என பவன் கல்யாண் ஆலோசித்து வருவதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.