பாலிவுட் செல்லும் சாய்பல்லவி: சீதையாக நடிக்க பேச்சு வார்த்தை

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சாய்பல்லவிக்கு இதற்கு முன் பல பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்க மறுத்து விட்டார். காரணம் ஹிந்தி படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியது இருக்கும் என்பதால். ஆனால் இந்த முறை வரும் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். காரணம் இது சீதையாக நடிக்கும் வாய்ப்பு, கவர்ச்சிக்கு வேலையே இல்லாத கேரக்டர்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராமாயணத்தை ஹிந்தியில் தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக ஹிருத்திக் ரோஷனும் நடிப்பதாக உறுதியாகி உள்ளது. இதில் சீதையாக தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. இந்த படத்திற்கு நீண்ட நாள் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என்பதால் தீபிகா படுகோனே விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சீதையாக சாய்பல்லவியை நடிக்க வைக்க அல்லு அரவிந்த் முடிவு செய்திருக்கிறார். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. சாய்பல்லவி தரப்பில் படத்தின் ஸ்கிரிப்டை படிக்க கேட்டுள்ளனர். “சீதை கேரக்டரில் நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஹிந்தியில் படமாவதால் சரியாக நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை வரவேண்டும். ஸ்கிரிப்டை படித்து முடித்ததும் அந்த நம்பிக்கை கிடைத்தால் நடிப்பார்” என்கிறது சாய்பல்லவி தரப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.