மாண்டஸ் புயலால் தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை!: 3,863 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் 3,863 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மாண்டஸ் புயல் நேற்று இரவு 9.30 மணி முதல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக புயல் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகம் வரை காற்று வீசியது. இன்று காலையிலும் சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு அணைகள், பாசன குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில்,

* தமிழ்நாட்டில் 3,863 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசனக் குளங்களில் 820 குளங்கள் நிரம்பின.

* தஞ்சை மாவட்டத்தில் உள்ள 641 பாசனக் குளங்களில் 399 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசனக் குளங்களில் 218 குளங்கள் நிரம்பின.

* சிவகங்கை 205, திருவண்ணாமலை 308, புதுக்கோட்டை 174, ராணிப்பேட்டை தலா 178, திருவள்ளூர் 183 குளங்கள் நிரம்பின.

* காஞ்சி 146, கள்ளக்குறிச்சி 93, விழுப்புரம் 89, கிருஷ்ணகிரி 78, தென்காசி 221, ஈரோடு 14, குமரி 25 குளங்கள் நிரம்பியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.