மாண்டஸ் புயல்: விலங்குகளுக்கு பாதிப்பு இல்லை – அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

மழை மற்றும் புயலால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், மிருகங்கள் தங்கி இருக்கும் கூண்டுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்ட ராட்சச மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் பூங்காவின் ஒருபக்கம் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதனை அடுத்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரம்பங்கள் மூலம் மரங்களை துண்டுகளாக அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வண்டலூர் பூங்காவிற்கு வந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சேதங்களை பார்வையிட்டு அகற்றும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியாவிலேயே ஒரு பழமையான பூங்கா. இங்கு சுற்றுச்சுவர்கள் அனைத்தும் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியுள்ளன. இங்கு ஏறக்குறைய 182 வகை உயிரினங்கள், 2,382 வன உயிரினங்கள் உள்ளன. நேற்று ஏற்பட்ட மாண்டஸ் புயலினால் இங்கு மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் அமைச்சர் என்ற முறையில் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கு வந்து ஆய்வு செய்ததில் ஏழு பெரிய மரங்களும், ஏராளமான சிறிய மரங்களும் கீழே விழுந்து உள்ளன.

பூங்கா வளாகத்தில் உள்ளே உள்ள அலுவலகம் பின்னால் இருக்கின்ற மதில் சுவர் சேதமடைந்து உள்ளது.

அது உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே விரைவில் அது சரி செய்யப்படும்.

கீழே விழுந்த மரங்கள் அனைத்தையும் இன்று மாலைக்குள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து விடுவதாக பூங்காவின் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

பூங்காவில் அனைத்து அதிகாரிகளும் பணியில் உள்ளதால் பராமரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. நேற்று பெய்த மழை மற்றும் புயலினால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மிருகங்கள் தங்கி இருக்கும் கூண்டுகளுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை.

மரங்கள் விழுந்ததில் மதில் சுவர் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. மற்றபடி வேறு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்தியாவிலேயே நம்பர் ஒன் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இதுவரை மைசூரு பூங்கா தான் சிறந்த பூங்கா என சொல்லி வந்தனர். ஆனால் இந்த வருடம் ஆல் இந்தியா லெவலில் ஒரு நிறுவனம் கணக்கெடுத்து வண்டலூர் பூங்கா இந்தியாவில் உள்ள 16 பூங்காக்களில் 82 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவதாக தான் மைசூரு பூங்கா உள்ளது.

வேலையே வேண்டாம் என அச்சப்படும் அளவிற்கு அலுவலக சாலை அமைந்துள்ளது

மாண்டஸ் புயலினால் வனத்துறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பூங்காவில் தற்காலிக பணியாளர்களாக பத்தாண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்களை நிரந்தரமாக்க முயற்சித்து வருகிறோம்.

அது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.