மெரீனா மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் தகவல்!

மாண்டஸ் புயலால் சேதமடைந்த சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை இரண்டு, மூன்று தினங்களில் சீரமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை உலகப் புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை திமுக அரசால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சேதமடைந்தது. மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டன. இதனால், மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சேதமடைந்தது. பாதை அமைத்து சில நாட்களிலேயே சேதமடைந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்குட்பட்டே, பாதை அமைக்க முடியும் எனவும், புயல் போன்ற பெருங்காற்று வீசும் சமயத்தில் மரங்களே வேரோடு சாயும் சமயத்தில் மரப்பாதை சேதமடைவது இயல்பு தான் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்டஸ் புயலால் சேதமடைந்த சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை இரண்டு, மூன்று தினங்களில் சீரமைக்கப்படும் என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை சேதமடைந்துள்ளது. இயற்கை சீற்றத்தினால் இது நடந்துள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் கான்க்ரீட் அமைப்புகளுக்கோ, இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்க அனுமதி இல்லை. அதனாலேயே மரப்பாதை அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் வலுவான பாதையை அமைக்க நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சேதமடைந்த பாதை இன்னும் 2, 3 தினங்களில் சீரமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மீண்டும் கடலையும், கடற்கரையையும் நாடும்படி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.