ஹிமாச்சல் முதல்வர் ரேஸில் ஒருவர் அவுட்; காங்கிரஸில் பர பர.!

68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளிடையே போட்டி நிலவியது. தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும், பாஜக – காங்கிரஸ் இடையே தான் இரு முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில், காங்கிரஸ் பெரும்பான்மையைத் தாண்டி 40 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சி, 19 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.

இதை அடுத்து, முதலமைச்சர் பதவியை ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே நேற்று புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய, தலைநகர் சிம்லாவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால், முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர ஹூடா, ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கினர்.

இதனால் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் தேர்வு நடைபெறவில்லை. மாறாக, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஹிமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் பந்தயத்தில், பிரதிபா சிங், சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், முதலமைச்சருக்கான ரேஸில் இருந்து பிரதிபா சிங் வெளியேறியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் தேர்வுக்கான நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மறைந்த தனது கணவர் விர்பாத்ரா சிங் பெயரைச் சொல்லி தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக பிரதிபா சிங் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 40 எம்எல்ஏக்களின் ஆதரவு பிரதிபா சிங்கிற்கு இல்லாததே, முதல்வர் போட்டியில் இருந்து அவர் வெளியேறுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஹிமாச்சல் தோல்வி; பாஜக தலைவர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

அதேபோல் ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு, 25 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், முதலமைச்சராக அவர் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரியும் முதலமைச்சர் ரேஸில் உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.