5 ஆண்டில் 28,572 விவசாயிகள் தற்கொலை: ஒன்றிய வேளாண் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அளித்த எழுத்துப்பூர்வமான பதில், ‘கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதன்படி, 2017ம் ஆண்டில் 5,955 விவசாயிகளும், 2018ம் ஆண்டில் 5,763 பேரும், 2019ம் ஆண்டில் 5,957 பேரும், 2020ம் ஆண்டில் 5,579 பேரும், 2021ம் ஆண்டில் 5,318 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் இரண்டு இடங்களிலும் இந்த மாநிலங்கள் உள்ளன. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகள், பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.