8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு சென்னையை நெருங்கியது. புயலானது இரவு 11.30 மணியில் இருந்து  மாமல்லபுரம் அருகே அதிகாலை  கரையை கடந்தது. கரையை கடக்கும்போது 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நள்ளிரவு நேரத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசியது. மரங்கள், மரக்கிளைகள், மின் கம்பங்கள், விளம்பர பலகைகள் சூறாவளி காற்றில் விழுந்தன. ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புயலாக கரையை கடந்த மாண்டஸ் இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி வேலூர் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலுக்குள் படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறக்கூடும். 

இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் . சென்னையை பொறுத்தவரை அடுத்த மூன்று மணி நேரத்தில் மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

புயல் கரையை கடந்ததால் தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காலையில் இருந்து காற்று படிப்படியாக குறைந்துள்ளது. 55 கி.மீட்டரில் இருந்து 30-40 கி.மீட்டராக காற்றின் வேகம் குறையும். தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, வட இலங்கை கடலோர பகுதிகளிலும் காற்றின் வேகம் படிப்படியாக குறையும். அதனால் இன்று மாலைவரை மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.