எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024ல் பாஜவுக்கு பாடம் புகட்டலாம்: நிதிஷ் குமார் அழைப்பு

பாட்னா: ‘எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் 2024 மக்களவை தேர்தலில் பாஜவுக்கு பாடம் புகட்டலாம்’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசி உள்ளார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய மாநாடு தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார்  பேசியதாவது:
2005ம் ஆண்டிலோ, 2010ம் ஆண்டிலோ எந்த சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ எங்களை விட அதிக இடங்களை வென்றதில்லை. அதன்பின் 2020 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் இருந்து கொண்டே எங்களுக்கு எதிராக  பாஜ சதி செய்தது.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுடன் மறைமுகமாக கைகோர்த்து எங்கள் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தினர். இதற்கெல்லாம் 2024ம் ஆண்டில் நடக்கும் மக்களவை தேர்தலில் அவர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள். அதற்கு ஒத்த கருத்துடைய அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அது 3வது கூட்டணியாக இல்லாமல், முக்கிய கூட்டணியாக இருக்க வேண்டும். அவ்வாறு இணையும் பட்சத்தில், மக்களவை தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பெற முடியும். இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.