பாதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு உண்ணாவிரதம் இருந்த ஆந்திர முதல்வரின் சகோதரி திடீர் கைது: மருத்துவமனையில் அனுமதி

திருமலை: தெலங்கானாவில் பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஷர்மிளாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் திடீரென கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார்.

தற்போது  அவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 3,500 கி.மீ. பாதயாத்திரை மேற்கொண்டு வந்த ஷர்மிளா ஆளும் கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் நர்சன்னபேட்டையில் பாதயாத்திரையின்போது ஆளும் டிஆர்எஸ் கட்சியினருக்கும் ஒய்எஸ்ஆர்  தெலங்கானா காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் ஷர்மிளாவை சந்திக்க முற்படும் அவரது கட்சியினரையும் தடுத்து கைது செய்து வந்தனர்.

இதனைக் கண்டித்து கைது செய்யப்பட்ட தனது கட்சியினரை விடுவிக்க கோரியும், மீண்டும் பாதயாத்திரை செல்ல அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக ஷர்மிளா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில் 3வது நாளாக நேற்று உண்ணாவிரதத்தை தொடர இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் போலீசார் வலுக்கட்டாயமாக ஷர்மிளாவை கைது செய்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.