அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை, மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒரு சில மாவட்டங்களில் காணப்படும் நகரங்களை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைவாக இந்த நகர அபிவிருத்தி பணிகளை செயல்திறன் மிக்கதாகவும் விரைவாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதேபோன்று குறித்த நகர சபைகளை, மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பிரதமரிடம் கோரியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
01. அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகள், மாநகர சபைகளாக தரமுயர்த்துதல்
தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒருசில மாவட்டங்களில் காணப்படும் நகரங்களை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2022.08.08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டு அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களில் பிரதான நகர சபைகளாகக் காணப்படும் அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகள் ஆகிய இரண்டு சபைகளிலும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திப் பணிகளை இலகுபடுத்துவதற்காக குறித்த நகர சபைகளை, மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.