உதயநிதியை அமைச்சர் ஆக்குவதால் திமுக இனி ஒரு முடிந்த சகாப்தமாகவே பார்க்கப்படும்: ஜெயக்குமார்

சென்னை: “எப்போது பார்த்தாலும், ஆளுநர் தேவையில்லை என்று திமுகவினர் கூறிவந்தனர். இப்போது முதல்வர் தனது பிள்ளைக்கு பட்டம் சூட்டவும், இளவரசராக முடிசூட்ட மட்டும் ஆளுநர் தேவையா?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் 24-ம் தேதி முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் நினைவு தின நிகழ்ச்சிகளுக்கு காவல் துறை அனுமதி வழங்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னைப் பெருநகர காவல் ஆணையரை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் உதயநிதி ஸ்டாலினின் அமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “குடும்பமே ஒரு கழகம் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதால், இனிமேல் திமுகவின் ஹெச்.ஆர் ஆக உதயநிதி இருப்பார்.

எப்போது பார்த்தாலும், ஆளுநர் தேவையில்லை என்று கூறிவந்தனர். இப்போது முதல்வர் தனது பிள்ளைக்கு பட்டம் சூட்டவும், இளவரசராக முடிசூட்ட மட்டும் ஆளுநர் தேவையா? உதயநிதிக்கு வந்து பட்டத்து இளவரசராக முடிசூட்டுவதன் மூலமாக திமுகவை இனி ஒரு முடிந்த சகாப்தமாகத்தான் பார்க்க முடியும்.

திமுகவுக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். கட்சிக்காக தியாகம் செய்தவர்கள், கஷ்டப்பட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் வாழையடி வாழையாக அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஒரு அரசப் பதவிக்கு வருகின்றனர். உதயநிதியை பட்டத்து இளவரசராக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கனவு நனவாகியுள்ளது. இதனால், தமிழ்நாடு ஒன்றும் அமெரிக்கா, லண்டன் போல் ஆகப்போவதில்லை. ஒண்ணும் நடக்கப்போவது இல்லை” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.