சீன வீரர்களுடன் மோதல்: இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: ராஜ்நாத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. யாரும் படுகாயம் அடையவில்லை என லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதல் தொடர்பாக லோக்சபாவில் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம்: கடந்த 9 ம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யங்ஸ்டே பகுதியை சீன வீரர்கள் ஆக்கிரமித்து அங்கு மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். இதனை இந்திய வீரர்கள் உறுதியான முறையில் சமாளித்தனர். நமது வீரர்கள், தைரியமாக சீன வீரர்களை எதிர்கொண்டு, அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் முகாம்களுக்கு திருப்பி அனுப்பினர்.

latest tamil news

இந்த விவகாரம் ராஜதந்திர வழிகள் மூலமாக சீன அரசிடம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. நமது எல்லைகளை பாதுகாக்க, நமது படைகள் உறுதிபூண்டுள்ளன. அதற்கு சவாலாக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக உள்ளனர் என்பதை இந்த அவைக்கு உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சில ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. படுகாயமும் அடையவில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்திய ராணுவ கமாண்டர்கள் உரிய நேரத்தில் தலையிட்டதால், சீன வீரர்கள் அவர்களின் முகாமிற்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

latest tamil news

இந்த சம்பவத்திற்கு பிறகு டிச.,11ல் அப்பகுதியில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மோதல் குறித்து எடுத்து கூறினார். ஆனால், இந்த மோதலை மறுத்த சீன ராணுவம், எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்தனர். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.