“தொழிலில் போட்டியிட முடியாததால் சதி" – ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்ததாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி மற்றும் மாடல் அழகிகளுக்கு சுகேஷ் சந்திரசேகர் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோராவிடம் அமலாக்கப்பிரிவு மற்றும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

நோரா

அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் நோரா ஃபதேஹி இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் ஜாமீன் கொடுத்துள்ளது. ஜாக்குலின் தனது ஜாமீன் மனுவில், `தன்னைப்போன்று நடிகை நோரா ஃபதேஹியும் பரிசுப்பொருள்களை சுகேஷிடம் வாங்கி இருக்கிறார். ஆனால் அவர் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் 15 மீடியா ஹவுஸ் ஆகியவற்றின் மீது நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நோரா ஃபதேஹி தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், `ஜாக்குலின் தெரிவித்த கருத்துக்களை 15 மீடியா ஹவுஸ் வெளியிட்டுள்ளது. 15 மீடியா ஹவுஸும், ஜாக்குலின் பெர்னாண்டஸும் இணைந்து சதி செய்துள்ளனர். மனுதாரரின்(நோரா) நிதி, சமூக அந்தஸ்தை, வீழ்த்த குற்றம் சாட்டப்படும் நபர் சதி செய்திருக்கிறார். நியாயமான முறையில் வேகமாக முன்னேறி வரும் மனுதாரருடன் போட்டியிட முடியாதவர்களை அச்சம் அடைய செய்துள்ளது. புகார்தாரருடன் நியாயமான முறையில் போட்டியிட முடியாத போட்டியாளர்கள் மனுதாரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க தொடங்கி இருக்கின்றனர். இது மனுதாரரின் வேலையிலும் இழப்பை ஏற்படுத்துகிறது.

ஜாக்குலினுடன் சுகேஷ்

சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்களை பெற்றதாக அமலாக்கப்பிரிவு மனுதாரர் மீது தவறாக குற்றம் சாட்டியிருக்கிறது. மனுதாரர் எந்த வித தவறும் செய்யவில்லை. சுகேஷ் சந்திரசேகருடன் நேரடியாக மனுதாரருக்கு நேரடி தொடர்பு கிடையாது. சுகேஷ் சந்திரசேகரின் மனைவி ரீனாவுடன் மட்டுமே தொடர்பு வைத்திருந்தார். அதோடு மனுதாரர் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து எந்த வித பரிசுப்பொருட்களையும் பெறவில்லை” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.