ராணுவ பெண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு…சிறப்பு தேர்வுக்குழு !| Dinamalar

புதுடில்லி’ராணுவத்தில், 246 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய, சிறப்பு தேர்வுக்குழு அமைக்கப்படும்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நம் ராணுவத்தில் பெண் அதிகாரிகள், குறுகிய காலப் பணியில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்தனர். இதனால், அவர்கள் அடுத்தடுத்த உயர் பதவிகளுக்கு செல்ல முடியாமல் இருந்தது. தங்களை குறுகிய காலப் பணியில் இருந்து நிரந்தரப் பணிக்கு மாற்றக் கோரி, சில பெண் ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதையடுத்து, தகுதியுடைய பெண்களுக்கு நிரந்தரப் பணி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையே, ராணுவத்தில் பணியாற்றும் 34 பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

ராணுவத்தில் ஆண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு தேர்வுக்குழு உள்ளது. அதேநேரத்தில் பதவி உயர்வு விஷயங்களில் பெண் அதிகாரிகள் பரிசீலிக்கப்படுவது இல்லை.

எங்களை விட ஜூனியர்களான ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. 1,200 ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. 240க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் தகுதி பெற்றிருந்தும், அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பெண் அதிகாரிகள் பதவி உயர்வு விஷயத்தில் நேர்மையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என கருதுகிறோம். நியமன விஷயங்களில் பாலின பாகுபாடு கூடாது. இந்த 34 பெண் அதிகாரிகள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். ஆண் அதிகாரிகளின் பதவி உயர்வை முடிவு செய்ய தேர்வுக்குழு அமைக்கப்படும் போது, பெண் அதிகாரிகளுக்கு ஏன் தேர்வுக்குழு அமைக்கக் கூடாது? இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

இந்த விஷயத்தில் மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. இந்த 246 பெண் அதிகாரிகளின் பதவி உயர்வு குறித்து முடிவு செய்ய, சிறப்பு தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்தக்குழு ஜனவரி முதல் செயல்படும். பெண் ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

சிறப்பு தேர்வுக்குழு ஜனவரியில் இருந்து செயல்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜன., 24க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை பதவி உயர்வு விஷயங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.