சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் முதலில் கைதான 6 பேரில் 3 பேருக்கு மட்டும் வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான 9 பேரில் 5 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின்(28) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்தனர். இதில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், தொடர் சோதனையின்போது வெடி பொருட்கள் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் (26) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்பிக் (25), நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த உமர் பாரூக் (39), தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் (28) ஆகிய மேலும் 3 பேரை அண்மையில் கைது செய்தனர்.
முதலில் கைது செய்யப்பட்ட 6 பேரின் பாதுகாப்பு கருதியும், அழைத்து வருவதில் அதிக நேரம் ஆவதை கருத்தில் கொண்டும் கோவை சிறையிலிருந்து வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு இருமுறை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். தற்போது 6 பேருக்கும் நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 6 பேரையும் கோவை சிறையிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்குக் கொண்டு வந்து அடைத்தனர். நேற்று காலை புழல் சிறையிலிருந்து 6 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்க என்ஐஏ அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 3 பேருக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களில் மீதமுள்ள முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில் மற்றும் தற்போது சிறையில் உள்ள உமர் பாரூக், பேரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (டிச.14) நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.