புதுடில்லி பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையின் போது தலைமை நீதிபதி கடுமை காட்டினார்.
கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது 3 வயது மகள் உட்பட குடும்பத்தினர் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதானவர்களில் 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது; உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளிகள் 11 பேரும், கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தையொட்டி விடுவிக்கப்பட்டனர்.
குஜராத் அரசின் இந்த உத்தரவுக்கு, மத்திய அரசும் அனுமதி அளித்தது. நன்னடத்தை காரணமாக அவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்தது.
இந்த விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி பீலா திரிவேதி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை, தலைமை நீதிபதி புதிய அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும், புதிய அமர்வை நியமிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன், பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதனால் எரிச்சல் அடைந்த தலைமை நீதிபதி, ”புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும்; மீண்டும் மீண்டும் அதையே குறிப்பிடாதீர்கள்,” என கடுமை காட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement