வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா கேரள பேரவையில் நிறைவேறியது

திருவனந்தபுரம்: பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதா நேற்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்டது. கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்க கேரள அரசு  கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அந்த சட்டத்திற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதாவை சட்டசபையில் கொண்டு வர கேரள அரசு முடிவெடுத்தது.

இந்த மசோதா நேற்று கேரள சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ராஜிவ் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த மசோதாவில் கையெழுத்து போடப் போவதில்லை என்று ஏற்கனவே கவர்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.