ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை: திருமங்கலம் அருகே சோகம்  

திருமங்கலம்: ஃப்ரி பயர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் பணத்தை இழந்த விரக்தியில், திருமங்கலம் அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்த உரக்கடை உரிமையாளர் தனசேகரன் மகன் வினோத்குமார் (21). டென்னிஷ் வீரரான இவர் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வரை, சக மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். நேற்று காலை உடன் தங்கியிருந்த மாணவர்கள் எழுந்து பார்த்தபோது வினோத்குமார் அறையில் இல்லை.

தேடி பார்த்தபோது ஒரு அறை கதவு மட்டும் உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது,  மாணவர் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவலறிந்து கள்ளிக்குடி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவர் வினோத்குமார் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதும் ரம்மி மற்றும் ஃப்ரி பயர் போன்ற விளையாட்டுகளை விளையாடி அதிகளவில் பணத்தை இழந்ததால் விரக்தியடைந்து விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* லோன் ஆப்பில் கடன் பெற்று கட்ட முடியாததால் விபரீதம்
போலீசார் கூறுகையில், ‘மாணவர் வினோத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட பெற்றோரிடம் பணம் வாங்கியுள்ளார். அடிக்கடி பணம் வாங்கியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். பணம் இல்லாததால் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், வினோத்குமார் மனவிரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வெகுநேரம் சிரித்து பேசி, விளையாடி மகிழ்ந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அனைவரும் உறங்க சென்ற பின்னர் மற்றொரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்’’ என போலீசார் தெரிவித்தனர்.

* கடந்த 15 நாளில் 6 பேர் தற்கொலை
கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் போலீஸ்காரர் உட்பட 4 பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 37 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 15 நாளில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமலிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.