மருத்துவமனையில் பணிக்கு வராத மருத்துவர்கள் அமைச்சர் அதிரடி நடவடிக்கை!

அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத 4 மருத்துவர்கள் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனை கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. அதற்காக காரில் சென்ற அமைச்சர் மதுராந்தகத்தில் அரசு மருத்துவமனையை கண்டதும் திடீரென்று ஆய்வுக்கு சென்றார்.

மருத்துவமனைக்கு உள்ளே சென்ற அமைச்சர், மருத்துவர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது 4 மருத்துவர்கள் பணிக்கு வராதது தெரிய வந்தது. அதை குறித்து வைத்து விட்டு வார்டுகளுக்குள் வேகமாக சென்றார்.

அங்கு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியிடமும் மருத்துவர்கள் வருகிறார்களா? சரியாக கவனிக்கிறார்களா? என்று கேட்டுக்கொண்டார். வார்டு மற்றும் சுற்றுப்புறங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அறைக்கு சென்று பணியில் இல்லாத மகப்பேறு மருத்துவர் மிர்லின், மயக்கவியல் துறை மருத்துவர் பிரபா வடிவுக்கரசி, எலும்பு முறிவு மருத்துவர் ஹர்ஷா பாலாஜி, தொண்டை, காது, மூக்கு சிறப்பு மருத்துவர் கிரத்திகா ஆகியோர் ஏன் பணியில் இல்லை?என்று கேள்வி எழுப்பினார்.

பணிக்கு அவர்கள் வரவில்லை என்றால், விடுப்புக்கான கடிதம் எங்கே? என்று அவர் கேட்டார். அதற்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் அவர்கள் பணிக்கு வராதது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 17 பி மெமோ கொடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனால் அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த அதிரடி செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.