தமிழக அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிட மாறுதல் கோரிக்கையை நீண்ட நாட்களாக தமிழக அரசிடம் வைத்து வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியாக பணியிட மாறுதல் நடைபெற்றது. அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல் நெறிமுறையானது கடந்த 08/11/2022 அன்று அரசாணையாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி பரிசீலனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு கல்லூரி ஆசிரியர்களிடம் இருந்து சுமார் 569 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் காலி பணியிடம் இன்மை மற்றும் 50 சதவீதத்திற்கு குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணிபுரியும் இடங்கள் ஆகிய காரணங்களால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தவிர 192 ஆசிரியர்களுக்கு அவர்களின் விருப்பப்படி தேர்வு செய்த அரசு கல்லூரிகளுக்கு வெளிப்படையான பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடையாளமாக பத்து கல்லூரி ஆசிரியர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆணைகளை வழங்கினார்.