பெண்களின் வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகள் எடுக்கலாமா? – அறிவியல்பூர்வ ஆதாரம் கேட்ட சென்னை ஐகோர்ட்

சென்னை: இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்த வழக்கில், ஒரு பெண்ணின் வாழ்நாளில் ஒரு முறைக்கு மேல் கருமுட்டைகள் எடுக்கலாம் என்பது தொடர்பான அறிவியல் ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் செயற்கை கருத்தரித்தலை முறைப்படுத்தும் வகையில், இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்தல் சட்டத்தை மத்திய அரசு, 2021-ம் ஆண்டு நிறைவேற்றியது. இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து கருமுட்டை வாங்கும் பெண்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், “இந்த சட்டத்தில் கரு முட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெற வேண்டும். 23 முதல் 35 வயது வரையிலான பெண்களிடம் அவர்களின் ஆயுட்காலத்தில் ஒரு முறை மட்டுமே கருமுட்டைகளை எடுக்க வேண்டும். ஒரு தம்பதியருக்கு ஒரு முறைக்கு மேல் கரு முட்டைகளையோ, விந்தணுக்களையோ வழங்கக் கூடாது. ஆனால் அந்த சட்டத்தில் நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஆறு முறை வரை கருமுட்டை தானம் வழங்கலாம் என கண்டறிந்துள்ளன. இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது. சட்டம் அமலுக்கு வந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை கரு முட்டை வங்கிகள் அமைக்கப்படவில்லை.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தையில்லா தம்பதியர், குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை பறிக்கும் செயல். எனவே, இந்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். கரு முட்டை வங்கிகள் அமைக்கும் வரை, தானம் அளிப்பவர்களிடம் கரு முட்டைகளைப் பெற்று செயற்கைக் கருத்தரித்தல் நடைமுறையை தொடர அனுமதிக்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி ஆறு முறை கருமுட்டைகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பெண்களிடம் அவர்களின் வாழ்நாளில் ஆறு முறை வரை கரு முட்டைகளை எடுக்கலாம் என்பதற்கு என்ன அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கை உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பான ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை, ஜனவரி 3 ஆவது வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.