புதுடில்லி மின்சார திருட்டு வழக்கில் வழங்கப்பட்ட 18 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் இக்ரம். இவர் மின்சார திருட்டில் ஈடுபட்டதாக, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தண்டனை
கடந்த 2019ல் இவர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், 2020ல் தண்டனையை அறிவித்தது. அதில், ஒவ்வொரு வழக்கிலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை அனைத்தையும் அவர் தனித்தனியாக அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 18 ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
விசாரணை
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இக்ரம் முறையீடு செய்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடுமாறு கோரினார்.
விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து, இக்ரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”மின்சார திருட்டை கொலைக்கு சமமாக பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில் தனி மனித சுதந்திரம் பறிபோவதை அனுமதிக்க முடியாது. இவர் ஏற்கனவே மூன்றாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ”எனவே, இந்த நீதிமன்றம் மனுதாரரை விடுதலை செய்கிறது,” என, நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement