ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆவினின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பொருட்கள் பணக்காரர்களுக்கான பொருளா, ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? என  கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆவின் நெய் மற்றும் பட்டர் விலைகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தமிழகஅரசு அதிரடியாக  விலைகளை உயர்த்தி உள்ளது.  இதுநாள்வரை 70 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 100 மில்லி லிட்டர் ஆவின் நெய் 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று 250 மில்லி லிட்டர், 500 மில்லி லிட்டர், 1 லிட்டர் என ஒவ்வொரு நிலையிலும் நெய்யின் விலையை அதிகரித்துள்ளது ஆவின். அதிகபட்சமாக, 5 லிட்டர் நெய் பாட்டீலின் விலை 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகஅரசின் விலை உயர்த்திய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாகவும், ஆவினுக்கு மூடுவிழா நடத்த தமிழகஅரசு திட்டமிடுகிறதா என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ளது, ஆவின் பொருட்கள் பணக்காரர்களுக்கான பொருளா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக,  அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த திமுக அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.

எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்ப்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ.20 உயர்த்தியுள்ளனர். எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச் சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.