சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் : மீண்டும் தமிழுக்கே திரும்பும் பாலா

இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரும்பாலும் மலையாளத்தில்தான் தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்தி நடித்து வருகிறார் பாலா. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த ஷபீக்கிண்டே சந்தோசம் என்கிற படத்தில் ஹீரோவின் நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் பாலா. அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்தது.

அதேசமயம் அந்த படத்தில் தான் உட்பட இன்னும் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பேசியபடி சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை என ஒரு பேட்டியில் குற்றம் சாட்டினார் பாலா. அதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான நடிகர் உன்னி முகுந்தன், பாலா உள்ளிட்ட பலருக்கும் முறையாக சம்பளம் செட்டில் செய்யப்பட்டு விட்டது என்பதை வங்கிக்கணக்கு ஆதாரங்களுடன் விளக்கினார். இந்த நிலையில் மலையாள திரையுலகில் தான் அவமானப்படுத்தப்பட்டது போல உணர்ந்த பாலா, இனி நான் இங்கே இருக்கப்போவதில்லை.. சென்னை திரும்புகிறேன்” என்று தற்போது கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நான் இப்போது சந்தோஷமாக இல்லை. தொடர்ந்து நடந்த பல நிகழ்வுகளால் நான் புண்படுத்தப்பட்டு உள்ளேன்.. நான் சென்னைக்கு திரும்புகிறேன். இனி இங்கே தங்க விரும்பவில்லை.. நான் பலருக்கு உதவி செய்ய முயற்சித்தேன். ஆனால் அவர்களோ என்னுடைய முதுகில் குத்தி விட்டனர்” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “இந்த சம்பள விவகாரம் தொடர்பாக பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஒருநாள் இரவு என் வீட்டிற்கே வந்து என்னை சந்தித்து முறையிட்டனர். அதன்பின்னரே நான் இந்த விவகாரத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் என்னிடம் முறையிட்டவர்கள் அனைவரும் தற்போது கப்சிப் என அடங்கி விட்டனர். இந்த விஷயத்தில் நான் மட்டுமே குற்றவாளி என்பது போல இப்போது சித்தரிக்கப்பட்டு உள்ளேன். ஆனாலும் மலையாளத் திரையுலகில் நடிகர் மனோஜ் கே ஜெயன் மட்டும்தான் என்னை போனில் அழைத்து இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தார்.. மிகச்சிறந்த மனிதர் அவர்.. அவருக்கு என்னுடைய நன்றி” என்று கூறியுள்ளார் பாலா .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.