காதல் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் தற்கொலை – பரிதவிப்பில் கைக்குழந்தை!

வேலூர், சத்துவாச்சாரி அருகேயுள்ள அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சர்மிளா, வயது 30. இவர், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ‘சாதி மாறித் திருமணமா?’ என பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்தபோதும், ‘கார்த்திக்கைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என உறுதியாக நின்று, அவரை கரம்பிடித்திருக்கிறார் சர்மிளா.

சர்மிளா

பின்னர், மனமிறங்கிவந்த பெற்றோர்கள், பிள்ளைகளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டனர். கார்த்திக்கும், சர்மிளாவும் அவர்களுக்குப் பிடித்தார்போல இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர். பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தற்சமயம் ஒன்றரை வயதாகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் பணியில் ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக கார்த்திக் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

கணவன் இறந்தத் துக்கத்திலிருந்த சர்மிளா, தனது கைக்குழந்தையுடன் அதே பகுதியிலிருக்கும் தாய் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தார். ஒரு மாதமாகியும் கணவனைப் பிரிந்த துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு அவரும் தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்.

தற்கொலை

வெளியில் சென்றிருந்த அவரது பெற்றோர், மீண்டும் வீடு திரும்பியபோது, தங்களது மகள் தூக்கில் சடலமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பேச்சு, மூச்சற்ற நிலையில் அவரது உடலை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்மிளா இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதுபற்றி, சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோர் எடுத்த அவசர முடிவால், அவர்களது ஒன்றரை வயது குழந்தையின் நிலை கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்தச் சம்பவம், உறவினர்கள் இடையே தீராத சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.