‘சரக்கு தர மாட்டியா… குண்டு வெடிக்கும் பாரு’ போனில் மிரட்டல் விடுத்த‘பச்சை மிளகாய்’ பீர்முகமது கைது

கோவை: சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை செல்போனில் பேசிய நபர், ‘‘கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். சிறிது நேரத்தில் வெடித்து விடும்’’ எனக்கூறிவிட்டு   இணைப்பை துண்டித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போத்தனூர் போலீசார் அந்த செல்போன் எண் குறித்து விசாரணை நடத்தினர். இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குனியமுத்தூர் சுகுணாபுரம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த  ‘பச்சை மிளகாய்’ என்கிற பீர்முகமது (44) என தெரியவந்தது. இவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் கேட்டு மிரட்டியுள்ளார்.  

அதற்கு பிறகே இவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த விவரம் தெரியவந்தது. போலீசார் இவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பீர்முகமது கடந்த சில ஆண்டாக போலீசாருக்கு மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். சில மாதம் முன், ‘‘என்னை ரவுடிகள் மிரட்டுகிறார்கள். போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’’ என போத்தனூர் போலீசாரிடம் கேட்டார். அவர்கள் முடியாது எனக்கூறியபோது செல்போனில் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு கோவையில் முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டினார். இந்த வழக்கில் இவர் கைதாகி சிறைக்கு சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.