இந்திரா வாழ்க்கை படம் : பார்லி.யில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும் கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சுதந்திர போராட்ட வீராங்கணை ஜான்சி ராணி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வாழக்கை படத்தில் நடித்தார். தற்போது அவர் எமெர்ஜென்ஸி என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இது முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்று படமாகும்.

இதன் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை பார்லிமென்ட்டில் படமாக்க கங்கனா திட்டமிட்டுள்ளார். இதற்கான அனுமதி கேட்டு அவர் பார்லிமென்ட் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எமெர்ஜென்சி காலத்தில் பல முக்கிய முடிவுகளை இந்திரா எடுத்தார். அந்த காட்சிகளை பார்லிமென்ட்டில் படமாக்கினால்தான் உயிரோட்டமாக இருக்கும் அதற்கு அனுமதி தரவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.

பொதுவாக பார்லிமென்ட்டில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பதில்லை. அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மட்டுமே இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் கங்கனாவுக்கு அனுமதி கிடைக்காது என்கிறார்கள். என்றாலும், அனுமதி கிடைக்காத பட்சத்தில் சம்பந்தபட்ட இடங்களை மட்டும் படம்பிடித்து அதனை புளூமேட் முறையில் காட்சிகளுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.