‘காசேதான் கடவுளடா பாடலில் உங்க வாய்ஸ் எங்க?’ -மீம்ஸ்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் பதிலடி!

‘துணிவு’ படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடல் தொடர்பான மீம்ஸ் மற்றும் கிண்டல்களுக்கு, நடிகை மஞ்சு வாரியர் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் அஜித், இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் 3-வது முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள ‘துணிவு’ படம், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேநேரத்தில், விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், ‘துணிவு’ படத்துடன் மோத உள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு நடிகர்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளதால், திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் செம கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இதனால் இருப் படங்களின் பாடல்கள் மற்றும் அப்டேட்டுகள் சிறு இடைவெளியில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றது.

image

இந்நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியாகி வரவேற்பு பெற்று வருவதுடன், யூ-ட்யூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேசமயத்தில், இந்தப் பாடலில் சில வரிகளை நடிகை மஞ்சு வாரியர் பாடியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது குரலை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் சுமார் 3.15 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், மஞ்சு வாரியர் குரல் கடுகளவுக்கு கூட இல்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தநிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையடுத்து நெகட்டிவ் விமர்சனங்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “துணிவு படத்தில் இருந்து காசேதான் கடவுளடா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் என் குரல் கேட்கவில்லையே என்று கவலைப்படுபவர்களின் கவனத்திற்கு, கவலைப்பட வேண்டாம். பாடலின் வீடியோ வெர்ஷனுக்காக என்னுடைய குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி. வேடிக்கையான என் ட்ரோல்களை ரசித்தேன்! எல்லோருக்கும் என் அன்பு” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.