சென்னையில் குடிபோதையில் மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வேலாயுதம்(55). இவரது மனைவி ரேவதி(48). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் வேலாயுதத்திற்கு மது அருந்து பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் ரேவதி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வேலாயுதத்தை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வேலாயுதம் மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த வேலாயுதம், தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறி, மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டு மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார்.
இதனால் பலத்த காயமடைந்த ரேவதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர்.