நாமக்கல்: தமிழ்நாட்டின் வனபரப்பை 33% அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில், சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில் இன்று (19.12.2022) நடைபெற்றது. பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாட்டின் வனப்பகுதிகளை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி தமிழ்நாட்டின் வனபரப்பை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தற்போது தமிழக வனப் பகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வனப்பகுதிகளில் மண்சார்ந்த மரங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தின் மொத்த புவி பரப்பில் 15 சதவீதம் வனப்பரப்பு பகுதியாகும். இதனை அடுத்த பத்து ஆண்டுகளில் 33 சதவீதம் அதிகரிக்கும் பொருட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்று கூறியுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றிட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். முன்னதாக பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் மரக்கன்றினை நட்டு வைத்தார்.
தொடர்ந்து கருத்தியல் விளக்க மையத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி நாமக்கல் மாவட்ட வனஅலுவலர் இராஜாங்கம், சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி ஆத்தூர் மாவட்ட வன அலுவலர் சுதாகர் ஆகியோர் உட்பட வன சரகர்கள், வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.