பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாக இருக்கும் பதான் திரைப்படத்தின் பெஷாராம் ராங் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் யூ-ட்யூபில் வெளியானது. அந்த பாடலில், நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் நடனமாடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஒரு காட்சியில் தீபிகா காவி நிறத்திலான பிகினியை அணிந்துள்ளார்.
தொடர்ந்து, காவி நிறத்தில் ஆபாச உடைகளை அணிந்து, காவியின் மதிப்பை கொச்சைப்படுத்துவதாக கூறி பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இதை மாநில அமைச்சர்கள், தலைவர்கள் முதல் அனைவரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பல்வேறு அமைப்பினர் வீதியில் போராட்டமும் நடத்தினர்.
இதனால், படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவை சபாநாயகர் கிரிஷ் கௌதம் பதான் படம் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகத்திடம் அவர் கூறுகையில்,”ஷாருக்கான் தனது மகளுடன் சேர்ந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். அப்போது, புகைப்படத்தை பதிவிட்டு தனது மகளுடன் படம் பார்ப்பதை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். இதேபோன்று நபிகள் நாயகம் குறித்து ஒரு படத்தை எடுத்து, வெளியிட முடியுமா என உங்களுக்கு சவால் விடுகிறேன்”
ஷாருக்கான் – கௌரிகான் தம்பதியின் மகளான சுஹானா கான் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். 22 வயதான சுஹானா, தற்போது சோயா அக்தர் இயக்கும் ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நாரோட்டம் மிஸ்ரா தீபிகா படுகோன் பிகினி சர்ச்சையை கிளிப்பிருயிருந்தார். மேலும், பதான் படத்தில் குறிப்பிட்ட காட்சியை படக்குழு நீக்காவிட்டால், படத்தை மத்திய பிரதேசத்தில் திரையிடுவதா வேண்டாமா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தார். காவி மற்றுமின்றி, பச்சை நிற உடை காட்சிகளும் நீக்கப்பட வேண்டும் என்றும். படத்தின் டைட்லில் இடம்பெற்றுள்ள அந்த குறிப்பிட்ட வண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து, ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், டாப்ஸி உடன் ‘டங்கி’ என பெயரிடப்பட படத்திலும், அட்லீ இயக்கத்தில் நயன்தாரா உடன், ‘ஜவான்’ படத்திலும் நடித்து வருகிறார். ஜவான் படம் 2023, ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.