கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகி திருவிக என்பவர் இன்று காலை திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கருத்தபட்டார். இவர் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற குழு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதால் இதற்காக கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நான்கு கார்களில் வந்த மர்ம கும்பல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கார் மீது ஆசீட் வீசி கண்ணாடி உடைத்து கடத்திச் சென்றனர்.

இன்று மதியம் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற குழு துணை தலைவர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிமுக வேட்பாளர் திருவிக சார்பில் அவரது வழக்கறிஞர் லஜபதி ராய் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வின் முன்பு அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டு விட்டதாக முறையிட்டார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் தேர்தல் குறித்தான வழக்கின் அடுத்த விசாரணை எப்பொழுது வருகிறது என கேள்வி எழுப்பினர். அதற்கு வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணை வரவுள்ளதால் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என கூறி வழக்கறிஞரின் முறையீட்டை முடித்து வைத்துள்ளனர். அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகளின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.