ஒரே இயக்குநரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வரலட்சுமி

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது தான் லட்சியம் என்பது போல ஒரு சில நடிகைகள் பயணிக்க, நடிகை வரலட்சுமி சரத்குமாரோ வித்தியாசமான கதை மற்றும் தன்னை கதையின் நாயகியாக முன்னிலைப்படுத்தும் படங்களை மட்டும் தேடித்தேடி நடித்து வருகிறார். கதாநாயகி, வில்லி என பல்வேறு பரிமாணங்களை நடிப்பில் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கில் இருமொழி படமாக உருவாகி வரும் ‛கொன்றால் பாவம்' என்கிற படத்தில் கிராமத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவி இளம் பெண்ணாக நடித்துள்ளார் வரலட்சுமி. இந்த படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். இந்த படத்தை தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது இதே இயக்குனர் டைரக்ஷனில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் வரலட்சுமி..

ஆனால் இந்த படம் தியேட்டர்களுக்கு என இல்லாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விதமாக உருவாகிறதாம். திரில்லர் படமாக உருவாகும் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வரலட்சுமி. சமீபத்தில் கலகத்தலைவன் படம் மூலம் வெளிச்சம் பெற்ற பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். பெங்களூருவை கதைக்களமாக கொண்டு போலீசுக்கும், குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் பூனை – எலி விளையாட்டை போன்று இந்த படத்தின் கதை விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.